காலமெனும் தெய்வ மகள் கையிலுள்ள துலாக்கோலில்
எந்த எடை எப்பொழுது எவ்வளவென்று யாரறிவார் ?
மண்ணுமொரு காலமதில் மலையேற்றிவைத்தாலும்
பின்னுமொரு காலமதில் பெரும்பள்ளம் தோன்றிவிடும்
ஒரு நாள் உடல் உனக்கு உற்சாகமிருக்கும் - மறுநாள்
தளர்ந்துவிடும் . மறுபடியும் தழைத்துவிடும் .
ஆள் ,அம்பு ,சேனையுடன் அழகான வாழ்வு வரும்.
நாள் வந்து சேர்ந்துவிட்டால் நாலும் கருகிவிடும் .
ஜாதகத்து ராசியிலே சனி திசையே வந்தாலும்
பாதகத்தை வழங்காமல் பரிசு தரும் காலம் வரும் .

எல்லோருக்கும் ஏடெழுதி இறைவன் வைத்திருக்க

பொல்லாத காலமென புலம்புவதில் லாபமென்ன ?
எவனோ ஒருவன் உனையேற்றி புகழ்வதுண்டு
மகனே தலை எழுத்தாய் மாற்றம் பெறுவதுண்டு
பல்லாயிரம் ஆண்டு பாராண்ட தலைமுறையும்
செல்லாத காசாகி தெருவிலே அலைவதுண்டு
மன்னர்கள் போனதுண்டு ,மந்திரிகள் வருவதுண்டு
மந்திரிகளை அழித்துவிட்டு மாசேனை ஆள்வதுண்டு.

மாசேனை நடுவினிலே விளையாடும் காலமகள்

சதிசெய்வாள் - சில நேரம் தர்பாரிலும் ஏற்றிவைப்பாள்
இன்னது தான் , இப்படித்தான் என்பதெல்லாம் பொய்கணக்கு
இறைவனிடம் உள்ளதடா எப்போதும் உன் வழக்கு

நாளை பெரும் நன்மை நடக்குமென விதி இருந்தால்

இன்று பொழுதெல்லாம் இடுக்கண்ணே வந்து நிற்கும்
போகிற வண்டியெல்லாம் ஊர் சென்று சேர்ந்துவிட்டால்
தேடுகின்ற கோவிலை நீ தேடாமல் போய்விடுவாய்
காதலியாய் வேஷமிட்ட கட்டழகு நடிகையெல்லாம்
தாயாய் வேஷமிட்டு தடியூன்றி வருவதெல்லாம்
காலமகள் விட்டெறிந்த கல்லால் விளைந்த கதை.

சட்டியிலே வேகின்ற சரக்கெல்லாம் சத்தானால்

மட்டின்றி படித்து வந்த மருத்துவருக்கு வேலையென்ன ?
ஆலமரம் தளருங்கால் அடிமரத்தை விழுது தொடும்
நீ இழந்த பெருமையெல்லாம் நின் மக்கள் பெறுவதுண்டு
நீ இழந்த செல்வமெல்லாம் நின் பேரன் அடைவதுண்டு

வளமான ஊருணி நீர் வற்றாமலே இருந்தால்

புதிதான நீர் உனக்கு பூமியிலே கிடைக்காது
இதனாலே சோர்வடைந்தால் அடுத்தகடை திறக்காது
ஞானத்திலே நீ ஒருவன் நடத்து உன் நாடகத்தை
காலத்தின் சிந்தனையின் கனவென்னவோ ?
நனவென்னவோ ?

- கவியரசு கண்ணதாசன்

Comments

Popular Posts